Thursday, October 17, 2013

புதிய தலைமுறை’ தொலைக்காட்சி குழுமத்திலிருந்து அக்டோபர் 23ம் தேதி முதல் ‘புது யுகம்’


புதிய தலைமுறை’ தொலைக்காட்சி குழுமத்திலிருந்து அக்டோபர் 23ம் தேதி முதல் ‘புது யுகம்’ என்ற புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பாக உள்ளது. எச்டி தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாக உள்ள இத் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பை அளிக்கக் கூடியதாகும். இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சிஇஓ ஷியாம் குமார் கூறுகையில், “இந்த ‘புது யுகம்’ தொலைக்காட்சியை ஒளிபரப்ப இருப்பது மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய ஒன்றாகும். தீபாவளிக்கு முன்னதாகவே இத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பைத் துவக்க முடிவெடுத்துள்ளோம். இத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் நிச்சயம் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கும். நேயர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தையும், புதிய அனுபவத்தையும் இத் தொலைக்காட்சி மூலம் வழங்க இருக்கிறோம்,” என்றார். இத் தொலைக்காட்சியின் மெகா தொடர்கள், சினிமா நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் போன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா, சமுத்திரக்கனி, ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம், நிம்பஸ் ஆகியோர் தொலைக்காட்சித் தொடர்களை தயாரிக்க உள்ளார்கள். ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ், மொபைல் ஆகியவற்றிலும் இத்தொலைக்காட்சியைப் பார்க்கும் வசதிகள் செய்யப்பட உள்ளன. இத்தொலைக்காட்சியின் விளம்பர நிர்வாகத்தை கவனிக்கும் ஃபோர்த் டைமன்ஷன் சிஇஓ சங்கர் கூறுகையில், “எங்கள் குழு இத் தொலைக்காட்சிக்காக இந்தியா முழுவதும் சென்று வந்துள்ளது. அனைவரிடமும் தொலைக்காட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 10 முதல் 12 விளம்பரதாரர்கள் ஏற்கெனவே ‘புது யுகம்’ தொலைக்காட்சிக்கு விளம்பரத்தை வழங்க ஒப்பந்தம் செய்து விட்டார்கள், ” என்றார். விரைவில் ‘புது யுகம்’ தொலைக்காட்சி பற்றி பெரிய அளவில் விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்

No comments: